ANI
இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கு: சூரஜ் ரேவண்ணா கைது

கிழக்கு நியூஸ்

பாலியல் வன்கொடுமை வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமேலவை உறுப்பினரும், முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கௌடாவின் பேரனுமான சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 16 அன்று பண்ணை வீட்டில் கட்சியைச் சேர்ந்த ஆண் நிர்வாகி ஒருவரைப் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த புகாரில் கர்நாடக காவல் துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்சி நிர்வாகி அளித்த புகாரின் பேரில் கர்நாடக காவல் துறை சனிக்கிழமை மாலை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த வழக்கு தற்போது சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சூரஜ் ரேவண்ணாவின் உதவியாளர் அளித்த புகாரின் பேரில் கட்சி நிர்வாகி, அவரது உறவினர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பொய்க் குற்றச்சாட்டை எழுப்பி சட்டமேலவை உறுப்பினரை மிரட்டியதாக அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தேவெ கௌடாவின் மற்றொரு பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல்வேறு பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.