கோப்புப்படம் ANI
இந்தியா

நவம்பர் 1-ல் கன்னட கொடியைக் கட்டாயம் ஏற்ற வேண்டும்: கர்நாடக துணை முதல்வர்

கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டியது அனைவருடையக் கடமை.

கிழக்கு நியூஸ்

கர்நாடகம் உதயமான தினத்தை முன்னிட்டு நவம்பர் 1 அன்று பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் கன்னட கொடியேற்ற வேண்டும் என அந்த மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு சதாசிவ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

"பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் மற்ற பகுதிகளிலுள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் (ஐடி/பிடி நிறுவனங்கள் உள்பட) கர்நாடகம் உதயமான தினத்தைக் கொண்டாட வேண்டும். நவம்பர் 1-ல் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி கன்னட கொடியை ஏற்ற வேண்டும்.

இளம் தலைமுறையினருக்கு கன்னடம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பெங்களூருவில் மொத்தம் உள்ளவர்களில் 50 சதவீதத்தினர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கன்னடம் பயில அவர்களுக்கு நாம் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.

ஐடி/பிடி நிறுவனங்கள் குறைந்தபட்சம் கன்னட கொடியேற்றி கொண்டாட வேண்டும். அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கொண்டாட்டப் புகைப்படங்களை பெங்களூரு மாநகராட்சியின் குறிப்பிட்ட வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி பகிர வேண்டும். கர்நாடகம் உதயமாகி 70 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டியது அனைவருடையக் கடமையாகும். பெங்களூரு மேம்பாட்டு அமைச்சராக இந்த முடிவை நான் அறிவிக்கிறேன்.

இது அரசு உத்தரவு. அதற்காக கன்னட ஆதரவு அமைப்புகள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வதற்கான அனுமதியை இது வழங்கவில்லை. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார் டி.கே. சிவக்குமார்.