இந்தியா

நடிகை கங்கனாவை அறைந்த பெண் காவலர்!

ராம் அப்பண்ணசாமி

சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்தார் மத்திய தொழில்பாதுகாப்புப் படையின் பெண் காவலர் குல்விந்தர் கவுர். பஞ்சாப் மாநிலத்தில் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் முன்பு கூறியதால் பெண் காவலர் அவரை அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண் காவலர் தன்னை அறைந்தது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கங்கனா ரனாவத் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொளியில் பேசிய கங்கனா, ‘என் மீது உள்ள அக்கறையில் தொலைபேசி வாயிலாக பலரும் அழைத்து வருகின்றனர். இந்தக் காணொளி வாயிலாக நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது அங்கிருந்த மத்திய தொழில்பாதுகாப்புப் படையின் பெண் காவலர் என்னை அறைந்தார். நான் நலமுடன் இருக்கிறேன், ஆனால் பஞ்சாபில் தீவிரவாதிகள் அதிகரித்துவிட்டனர்’ எனத் தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாக தீவிர பாஜக ஆதரவாளராக இருக்கும் கங்கனா ரனாவத், நடந்த முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக வெற்றி பெற்றார்.