இந்தியா

சூதாட்டத்தில் ரூ. 1.50 கோடி இழந்த கணவர்: விபரீத முடிவெடுத்த மனைவி!

யோகேஷ் குமார்

ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ. 1.50 கோடிக்கும் மேல் பணத்தை இழந்து கணவர் தவித்த நிலையில், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் தர்ஷன் பாபு. பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் 2021-ல் ரஞ்சிதாவை திருமணம் செய்துகொண்டார்.

த‌ர்ஷன் பாபு கடந்த 2022 ஐபிஎல் போட்டி முதல் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் கையில் இருந்த பணத்தை இழந்த அவர், ஒருகட்டத்தில் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக ரஞ்சிதா பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் தர்ஷன் பாபு தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ. 1.50 கோடிக்கும் அதிகமாக அவர் பணத்தை இழந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி கொடுக்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் 6 மாதங்களுக்கு முன்பு சித்ரதுர்காவில் இருந்த தங்களது நிலத்தை விற்று ரூ. 70 லட்சம் கடனை அடைத்துள்ளனர். கடன் கொடுத்தவர்கள் மீதமுள்ள பணத்தை திருப்பி கொடுக்குமாறு மீண்டும் நெருக்கடி கொடுத்த நிலையில் மார்ச் 18 அன்று ரஞ்சிதா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெங்களூரு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து ரஞ்சிதாவின் படுக்கை அறையில் இரண்டு பக்க தற்கொலை கடிதம் கிடைத்ததாகத் தெரிகிறது. அதில் ரஞ்சிதா, தனது கணவர் தர்ஷன் பாபு ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது, இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, கடன் கொடுத்தவர்களின் மிரட்டல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.