இந்தியா

ரயில் டிக்கெட் கட்டணம் உயரவுள்ளதாகத் தகவல்!

புறநகர் ரயில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை.

கிழக்கு நியூஸ்

ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

கட்டண உயர்வானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, மெயில்/விரைவு ரயில்களில் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு கி.மீ.-க்கு ஒரு பைசா கட்டணம் உயரவுள்ளது. ஏசி வகுப்புகளுக்கு கி.மீ.-க்கு 2 பைசா கட்டணம் உயரவுள்ளது. அதேசமயம், 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கு சாதாரண இரண்டாம் வகுப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்படாது. இதுவே 500 கி.மீ. மேல் பயணம் செய்தால், சாதாரண இரண்டாம் வகுப்புக்கு ஒரு கி.மீ.-க்கு அரை பைசா விலை உயர்கிறது.

புறநகர் ரயில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை. மாதாந்திர பயணக் கட்டணமும் உயர்த்தப்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே செயல்பாடுகளுக்கான செலவை ஈடுகட்டும் வகையில், அதேசமயம் பயணிகளின் சுமையை அதிகரிக்காத வகையில் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, ஐஆர்சிடிசி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என்ற நடைமுறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது. இது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.