மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமைக்கு இடையில், இந்தியா தனது எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பாகக் கையாள தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரானின் பல இடங்களைத் தாக்கி வருகின்றன. ஈரானின் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் படுகொலையுடன் தொடங்கிய இந்தப் போரில், ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமன்றி அமெரிக்கப் படைகள் முகாம் கொண்டுள்ள வளைகுடா நாடுகளின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளிடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது.
எரிபொருள் விநியோகத்தில் இடையூறு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோக இடையூறுகள் ஏற்படும் அச்சம் நிலவுகிறது, இதையடுத்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாட்டின் எரிபொருள் இருப்பு, கொள்முதல் செய்யப்படும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
போதுமான இருப்பு உள்ளது
அதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
“இந்தியா உலக அளவில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராகவும், நான்காவது பெரிய சுத்திகரிப்பாளராகவும், ஐந்தாவது பெரிய பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதியாளராகவும் உள்ளது. நாடு கச்சா எண்ணெய் மற்றும் முக்கிய பெட்ரோலிய பொருள்களான பெட்ரோல், டீசல், விமானத்திற்கான எரிபொருள் ஆகியவற்றில் போதுமான இருப்பை வைத்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்து ஏற்படக்கூடிய குறுகிய கால இடையூறுகளைச் சமாளிக்க இது போதுமானது.
எரிபொருள் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
கடந்த சில ஆண்டுகளில், இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களை பல்வகைப்படுத்தியுள்ளது. இதனால், எரிசக்தி கிடைப்பதும், விலை கட்டுப்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய எரிசக்தி நிறுவனங்கள் இப்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லாத எரிசக்தி விநியோகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளன. அதன்மூலம் எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும் நிலையில் இருப்பதால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தற்காலிகமாக பாதிக்கப்படும் விநியோகங்களைச் சமாளிக்க உதவும். மத்திய அரசு நாடு முழுவதும் பெட்ரோலிய பொருள்களின் விநியோகம் மற்றும் இருப்பு நிலையை தொடர்ந்து கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இருப்பு நிலை குறித்து அரசு நியாயமான அளவில் நம்பிக்கையுடன் உள்ளது. இந்திய நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பது மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது. தொடர்ச்சியான கண்காணிப்பின் அடிப்படையில், தேவை ஏற்பட்டால் படிப்படியான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக உள்ளது” என்று கூறியுள்ளது.
Union Minister Hardeep Singh Puri has said that India is ready to handle its fuel supply securely amid the war situation in the Middle East.