இந்தியா

கனடாவில் ஹிந்துக் கோயில் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

கனடாவில் பிராம்ப்டனிலுள்ள ஹிந்துக் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"பிராம்ப்டனில் ஹிந்து சபைக் கோயிலில் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட வன்முறைச் செயல்களைக் கண்டிக்கிறோம். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் நிகழாமல் இருப்பதை கனடா அரசு உறுதி செய்ய வேண்டும். வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். கனடாவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்ந்து கவலையளிக்கிறது."

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்புடைய எக்ஸ் தளப் பதிவில், "பிராம்ப்டனிலுள்ள ஹிந்து சபைக் கோயிலில் வன்முறைச் சம்பவம் அரங்கேறியது ஏற்றுக்கொள்ள முடியாதது. கனடாவிலுள்ள அனைவருக்கும் அவர்களுடைய நம்பிக்கையை சுதந்திரமாகப் பின்பற்ற உரிமை உள்ளது" என்று கனடா பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிலுள்ள ஹிந்து சபைக் கோயில் வெளியே உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை வன்முறைச் சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்புடையக் காணொளிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன.