கோப்புப்படம் 
இந்தியா

ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் ஆகிறார் ஹேமந்த் சோரன்!

முதல்வர் சம்பாய் சோரன் இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

கிழக்கு நியூஸ்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார்.

நிலமோசடி மற்றும் பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவருமான ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் பொறுப்பை ஏற்றார். சம்பாய் சோரன் 47 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரன் கடந்த 28 அன்று பிணையில் வெளியே வந்தார். ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இவருக்குப் பிணை வழங்கியது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கூட்டம் ராஞ்சியிலுள்ள முதல்வர் சம்பாய் சோரன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகளால் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், முதல்வராக உள்ள சம்பாய் சோரன் இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம், ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார்.