தேவகௌடா மகன் மீதும் வழக்குப்பதிவு 
இந்தியா

பாலியல் புகார்: தேவகௌடா மகன் மீதும் வழக்குப்பதிவு

யோகேஷ் குமார்

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகன் ரேவன்னா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 26 அன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் காணொளிகள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இது தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகனுமான ரேவன்னா மீதும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் பணியாற்றும் நபர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.