பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை ஒட்டி அவரது புகழ்பெற்ற வாசகங்களில் சில...
என் தாய் உயிருடன் இருந்தவரை நான் இயற்கையாகப் பிறந்தேன் என்றே நம்பினேன். அவர் மறைவுக்குப் பின், எனக்கு ஏற்பட்டிருந்த அனுபவங்களைப் புரட்டிப் பார்க்கையில், நான் கடவுளால் அனுப்பட்டிருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். எனக்கு இருக்கும் இந்தச் சக்தி, இயல்பான என் உயிரியல் உடலிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை. இது கடவுளால் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, இந்தத் திறமைகளையும் உத்வேகத்தையும் நல்லெண்ணங்களையும் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன். நான் ஒரு கருவி மட்டுமே. அதனால்தான், எனது எல்லா காரியத்திலும் கடவுள் என்னை வழிநடத்துகிறார் என்று நம்புகிறேன்.
(நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கங்கைக் கரையில் இருந்து, மே 2024-ல் மோடி அளித்த பேட்டி)
நான் டெல்லிக்கு வெளி ஆள். அதன் உள் விவகாரத்தைக் கொஞ்சம் உற்று நோக்கியபோது அதிர்ந்து போனேன். அங்கே ஒரு அரசாங்கத்திற்குள் பல அரசாங்கங்கள் சிதறிக் கிடக்கின்றன. அரசு துறைகள் ஒன்றோடு ஒன்று மோதலில் உள்ளன. அரசாங்கம் என்பது ஒரே அங்கமாகச் செயல்பட வேண்டும்.
(டெல்லி செங்கோட்டையில் 2014 ஆகஸ்ட் 15-ல் முதல் சுதந்திர தின உரை)
என்னை எவ்வளவு அவதூறாகப் பேசினாலும் கவலையில்லை. நான் சிவ பக்தன். அனைத்து விஷங்களையும் நான் விழுங்கிவிடுவேன்.
(அசாமில் 2025 செப்டம்பர் 14 அன்று ஆற்றிய உரை)
நீங்கள் (பாகிஸ்தான்) உங்கள் உணவை உண்டு, வளத்துடன் அமைதியாக வாழுங்கள். முடியாதென்றால் என் தோட்டா இருக்கிறது...
(குஜராத்தில் 2025 மே 27 அன்று ஆற்றிய உரை)
புல்வாமாவில் இறந்த வீரர்களுக்கு வாக்களியுங்கள். அங்கு நிலத்திலும் ஆகாய மார்க்கமாகவும் தாக்குதல் நடத்திய துணிச்சலான வீரர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள்
(மகாராஷ்டிராவில் 2019 ஏப்ரல் 09 அன்று ஆற்றிய உரை)
பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக இருக்க முடியாது. பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக இருக்க முடியாது. தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது
(ஆபரேஷன் சிந்தூர் குறித்து 2025 மே 12 அன்று ஆற்றிய உரை)
இந்தியா உலகிற்குப் போர்களைக் கொடுக்கவில்லை, புத்தரைத்தான் கொடுத்திருக்கிறது.
(வியன்னாவில் இந்திய வம்சாவளியினரிடையே 2014 ஜூலை 10 அன்று ஆற்றிய உரை)
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைக் காக்கும் பாதுகாவலன் நான். மோடியைப் போன்றதொரு பாதுகாவலன் இருக்கும்போது அவர்களுக்குச் சொந்தமானதைப் பறிக்க எவரும் துணிய மாட்டார்கள்.
(மகாராஷ்டிராவில் 2024 மே 10 அன்று ஆற்றிய உரை)