இந்தியா

இந்திய வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்!

ராம் அப்பண்ணசாமி

18-வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ` பாஜக கூட்டணி நிறுத்தும் சபாநாயகர் வேட்பாளருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும்’ என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், மக்களவை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் இருந்து 18-வது மக்களவைக்கு எட்டாவது முறையாகத் தேர்வாகியுள்ளார் சுரேஷ். மக்களவை உறுப்பினராக மிக நீண்ட அனுபவம் கொண்ட சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமிக்காததை முன்பு எதிர்க்கட்சிகள் கண்டித்தன.

துணை சபாநாயகர் பதவி குறித்த கோரிக்கைக்கு பாஜக எந்த ஒரு உறுதியும் அளிக்காததால் மக்களவை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் சுரேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

1952-ல் அமைந்த 1-வது மக்களவை தொடங்கி கடந்த 17-வது மக்களவை வரை, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த முறை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளதால் மக்களவை வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

பாஜக கூட்டணிக்கு மக்களவையில் 293 உறுப்பினர்கள் இருப்பதால், தேர்தல் நடைபெற்றாலும் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகர் பதவிக்குத் தேர்தெடுக்கப்படுவார்.