கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கேசி வீரேந்திர பப்பி, சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் சிக்கிமில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்தவர் வீரேந்திர பப்பி. அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்ட் 22 அன்று கேங்க்டாக், சித்ரதுர்கா, பெங்களூரு, ஹூபளி, ஜோத்பூர், கோவா, சிக்கிம் மற்றும் மும்பை என நாடு முழுக்க 31 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
இணையவழி பெட்டிங் மற்றும் கேமிங் தொடர்பாக வீரேந்திர பப்பி மற்றும் சிலருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையால் சோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அமலாக்கத் துறை சார்பில் கூறப்படுவதாக வெளியாகும் செய்திகளின்படி, வீரேந்திர பப்பி மற்றும் இவருக்கு நெருக்கமானவர்கள் பல்வேறு சட்டவிரோத பெட்டிங் செயலிகளை நடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், இவரிடமிருந்து ஏறத்தாழ ரூ. 12 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 1 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணமும் அடக்கம். ரூ. 6 கோடி மதிப்புடைய தங்கம், 10 கிலோ எடை அளவுக்கு வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாகவே வீரேந்திர பப்பி சிக்கிமில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை பெங்களூருவுக்கு அழைத்துச் செல்வதற்கான சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது அமலாக்கத் துறை. முதற்கட்ட விசாரணையில், பெரிய அளவிலான சட்டவிரோத பெட்டிங் கும்பலுடன் இவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிகிறது.
Enforcement Directorate | ED | Betting Case | KC Veerendra Puppy |