திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி உறுப்பினர்கள் அமளி Sansad TV
இந்தியா

திருப்பரங்குன்றத்தில் மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது: எல். முருகன் ஆவேசம் | Thiruparankundram |

நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்து டி.ஆர். பாலு பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்...

கிழக்கு நியூஸ்

திருப்பரங்குன்றம் கோயில் தீபம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1 முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 19 வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை இரு அவைகளும் கூடின. அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அவையின் மற்ற அலுவல்களை ஒத்தி வைத்து, விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் சென்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமளி ஏற்பட்ட நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்தி வைத்தார். இதேபோல, மாநிலங்களவையிலும் திமுக உறுப்பினர்கள் அவை ஒத்திவைப்பு நோட்டீஸைக் கொடுத்தார்கள். இதனை சபாநாயகரும் குடியரசுத் துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் நிராகரித்தார். இதனால் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் மீண்டும் மக்களவை கூடியது. அப்போது நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அறநிலையத்துறையைச் சார்ந்தவர்கள் விளக்கேற்ற வேண்டுமா? வேறு சிலர் ஏற்ற வேண்டுமா என்பதே பிரச்னையாக மாறியுள்ளது. அவர்கள் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறார்கள். இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று ஆர்.எஸ்.எஸ். நீதிபதி ஒருவரிடம் தீர்ப்பையும் பெற்றிருக்கிறார்கள். நாட்டை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கு மதக்கலவரத்தை உருவாக்க நினைக்கிறார்கள்” என்று பேசினார். நீதிபதி சுவாமிநாதன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, டி.ஆர். பாலுவின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேசினார். அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் மக்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட சமூகத்தைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக திமுக அரசு இப்படிச் செயல்பட்டு வருகிறது. இதனால் திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்திருக்கிறது. ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். இது மாநிலத்தின் சட்டப்பேரவையில் பேசவேண்டிய விஷயம். இதை நாடாளுமன்றத்தில் பேசி கலவரத்தை உருவாக்குவது ஏன்?” என்று பேசினார். இதனால் நாடாளுமன்ற மக்களவையில் அமளி ஏற்பட்டது.

There was a stir in both houses as DMK members engaged in a ruckus demanding a discussion in Parliament on the Thiruparankundram temple lamp issue.