கோப்புப்படம் 
இந்தியா

கெஜ்ரிவாலின் பிணை நிறுத்திவைப்பு: தில்லி உயர் நீதிமன்றம்

பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்க உரிய நேரம் வழங்காமல் பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

கிழக்கு நியூஸ்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை நிறுத்திவைத்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று பிணை வழங்கி உத்தரவிட்டது. அமலாக்கத் துறை சார்பில் போதிய ஆதாரம் எதுவும் வழங்கப்படாததால் பிணை வழங்குவதாகக் கூறி தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்க உரிய நேரம் வழங்காமல் பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

மேலும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரிக்கும் வரை, தில்லி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கு சற்று முன்னதாக, இந்த உத்தரவு வெளியாகியுள்ளதால் அவர் வெளியில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றம் அவருக்கு 21 நாள்களுக்குப் பிணை வழங்கி மே 10 அன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த பிணைக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 2 அன்று தில்லி திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார்.