பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹலும் அவருடைய மனைவி தனஸ்ரீ வர்மாவும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதாக மும்பை ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சஹலும் தனஸ்ரீயும் 2020-ல் திருமணம் செய்துகொண்டார்கள். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய 2020-ம் ஆண்டுத் தொடக்கத்தில் தனஸ்ரீயின் நடன வகுப்புகளில் சஹல் இணைந்தார். இருவரும் உடனடியாகக் காதலிக்க ஆரம்பித்து 2020 டிசம்பரில் திருமணம் செய்துகொண்டார்கள்.
எனினும் சமீபகாலமாக இருவரும் பிரிந்து வாழ்வதாகத் தகவல் வெளியானது. இருவரும் சமூகவலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பின்தொடர்வதையும் நிறுத்தினார்கள். தன்னுடைய இன்ஸ்டகிராமில் தனஸ்ரீ உடனான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார் சஹல். எனினும் தனஸ்ரீ இன்ஸ்டகிராமில் இருவருடைய புகைப்படங்களும் காணொளிகளும் இன்னமும் உள்ளன.
இந்நிலையில் இருவரும் விவாகரத்து கோரி மும்பை பந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததாகவும் நேற்று (பிப். 20) இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானதாகவும் ஏபிபி ஊடகம் செய்தி வெளியிட்டது. இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாகவும் கடந்த 18 மாதங்களாகப் பிரிந்து வாழ்வதாகவும் கூறியதையடுத்து, இருவருக்கும் நீதிமன்றம், விவாகரத்து வழங்கியதாகவும் தகவல் வெளியானது. பிறகு, ஜீவனாம்சமாக ரூ. 60 கோடியை தனஸ்ரீ கோரியதாகவும் கூறப்பட்டது.
நேற்று சஹல், தனஸ்ரீ ஆகிய இருவரும் தங்களுடைய இன்ஸ்டகிராமில் பதிவுகள் வெளியிட்டார்கள். தன்னுடைய பதிவில் சஹல் கூறியதாவது: நான் நினைத்ததை விடவும் அதிகமான முறை கடவுள் என்னைப் பாதுகாத்துள்ளார். அதனால் நான் அறியாதபோதும் காப்பாற்றப்பட்ட தருணங்களை என்னால் கற்பனை செய்துதான் பார்க்கமுடிகிறது. கடவுளே, நான் அறியாவிட்டாலும், எப்போதும் எனக்குத் துணை இருப்பதற்காக நன்றி என்று எழுதினார்.
தனஸ்ரீ தன்னுடைய பதிவில் கூறியதாவது: அழுத்தத்திலிருந்து ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் உள்ளேன். நம் கவலைகளையும் சோதனைகளையும் கடவுள் எவ்வாறு ஆசீர்வாதங்களாக மாற்றுகிறார் என்பது ஆச்சரியமாக இல்லையா? இன்று நீங்கள் எதையாவது வலியுறுத்துகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் கவலைப்படலாம், அல்லது எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, எல்லாவற்றுக்காகவும் பிரார்த்தனை செய்யலாம். கடவுள் உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்வார் என்கிற நம்பிக்கைக்கு சக்தி உள்ளது என்றார்.
எனினும் இதுவரை சஹலும் தனஸ்ரீயும் விவாகரத்து குறித்து அதிகாரபூர்வமாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.