இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், மனுஸ்மிருதியும் ஒப்பிட்டு சாவர்க்கர் எழுதியது குறித்து அரசியலமைப்பு சட்டம் தொடர்பான விவாதத்தில் பேசியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் முடிவடைந்ததை நினைவு கூறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் குறித்து மக்களவையில் நேற்று விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று மக்களவையில் நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியவை பின்வருமாறு,
`இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மோசமான விஷயம் என்னவென்றால் அதில் இந்திய அம்சங்கள் என எதுவுமே இல்லை. நமது ஹிந்து தேசத்தில் வேதங்களை அடுத்து அதிகமாக வழிபடக்கூடிய இடத்தில் உள்ளது மனுஸ்மிருதி. நமது தேசத்தின் நூற்றாண்டு கால ஆன்மீக மற்றும் தெய்வீகப் பயணம் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது…
இது சாவர்க்கரின் வார்த்தைகள். அரசியலமைப்பு சட்டத்தில் இந்திய அம்சங்கள் என எதுவுமே இல்லை என்று அவர் எழுதியுள்ளார். இந்தியாவை வழிநடத்தும் இந்தப் புத்தகத்தைவிட (அரசியலமைப்பு சட்டம்), அந்தப் புத்தகம் (மனுஸ்மிருதி) மேலானது என அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்’ என்றார்.
மேலும் பேசிய ராகுல் காந்தி, `உங்கள் தலைவரின் வார்த்தைகளை நீங்கள் (ஆளும்கட்சி) ஏற்றுக்கொள்கிறீர்களா எனக் கேட்க விரும்புகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசுவதால், நீங்கள் சாவர்க்கரை அவமதிக்கிறீர்கள், அவரைக் கிண்டல் செய்கிறீர்கள்’ என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், `தங்களது பைகளில் சிலர் அரசியலமைப்பு சட்டத்தை வைத்துக்கொள்கின்றனர், ஆனால் அதில் எத்தனை பக்கம் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அவர்கள் அதைத் திறந்துகூடப் பார்த்தது கிடையாது’ என்றார்.