`2022-2023 இந்திய யானைகளின் நிலை’ எனப் பெயரிடப்பட்ட மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானை கணக்கெடுப்பு அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் தயாரானது. ஆனால் அதன் பிறகு யானை கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த அறிக்கை தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்தில் வெளியான தகவலின்படி கடைசியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்பை ஒப்பிடும்போது, தற்போதைய இந்தியா யானைகள் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்ததாக கூறப்படுகிறது.
அதிலும், மத்திய இந்தியா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 41 சதவீதம் வரை யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமீபத்திய யானை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது. வளர்ச்சிப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம், சுரங்கங்கள் போன்றவற்றால் யானைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்தபோது, பிப்ரவரி மாதத்தில் தயாரிக்கப்பட்டது இடைக்கால் அறிக்கை எனவும், முழு அறிக்கை வரும் ஜூன் 2025-ல் வெளியாகும் எனவும் மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வருடங்களுக்கு ஒரு முறை இந்திய யானைகள் கணக்கெடுப்பை மத்திய வன அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெஹ்ராடூனில் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய வனவிலங்கு நிறுவனம் (Wildlife Institute of India) மேற்கொள்கிறது.