இந்தியா

பயிற்சி அதிகாரி பூஜா கேத்கரை ஐஏஎஸ் பதவியில் இருந்து நீக்கிய மத்திய அரசு

ராம் அப்பண்ணசாமி

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா மனோரமா திலீப் கேத்கரை ஐஏஎஸ் பதவியில் இருந்து நீக்கி மத்திய அரசு இன்று (செப்.07) உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் (பயிற்சி) விதிகள் 1954, விதி எண் 12-ன் கீழ் பூஜாவை ஐஏஎஸ் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இந்த விதி எண் 12-ன் கீழ் ஐஏஎஸ் பணிக்குத் தேர்தெடுக்கப்பட்ட தகுதி இல்லாத பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளை நீக்க மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஓபிசி சான்றிதழையும், மாற்றுத்திறளானி சான்றிதழையும் பெற்று, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளை மீறி குடிமைப் பணித் தேர்வில் பூஜா கேத்கர் கலந்து கொண்டதை விசாரணையில் தெரிந்து கொண்டது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயமான யுபிஎஸ்சி.

இதை அடுத்து, 2022 அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் பூஜா கேத்கர் பெற்ற தேர்ச்சியைக் கடந்த ஜூலை 31-ல் ரத்து செய்தது யுபிஎஸ்சி. இதைத் தொடர்ந்து தன் தேர்ச்சியை ரத்து செய்ய யுபிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் பூஜா கேத்கர்.

இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பூஜா கேத்கரை ஐஏஎஸ் பதவியில் இருந்து நீக்கி இன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.