கோப்புப் படம் ANI
இந்தியா

மலைப் பகுதியில் கார் ஓட்டிப் பழகும் போது விபத்து: பள்ளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு!

யோகேஷ் குமார்

கார் ஓட்டிப் பழகும் போது ஏற்பட்ட விபத்தால் 23 வயதான பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரத்தில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகர் என்ற பகுதியில் 23 வயதான ஷ்வேதா என்ற பெண்ணும் அவரது நண்பரும் கார் ஓட்டிப் பழகச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது அந்த பெண் காரை மெதுவாக ரிவர்ஸில் ஓட்டிக்கொண்டு வருகிறார். அந்த பெண்ணின் நண்பரும் அதனை வீடியோவாக பதிவு செய்கிறார். ஒரு கட்டத்தில் மலையின் விழும்புக்கு சென்ற அந்த பெண் ரிவர்ஸ் கியரில் இருந்தது அறியாமல் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்த மலையின் உச்சியில் இருந்து கார் பள்ளத்தில் விழுந்து அந்தப் பெண் உயரிழந்துள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கிளெட்சை அழுத்துமாறு அந்த பெண்ணின் நண்பர் கூச்சலிடுவதை அந்த காணொளியில் கேட்கமுடிகிறது.

இதுகுறித்த விசாரணையில் அந்த பெண் 300 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாகவும், அவரை மீட்க ஒரு மணி நேரம் ஆனதாகவும், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.