பயணிகள் விமானங்களுக்கான மிரட்டல்கள் அதிகரித்து வருவதால், ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சமீப நாள்களாக பயணிகள் விமானங்களுக்கு மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், விமானங்களில் பயணிக்கும் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
"உளவுத் துறை அளிக்கும் அறிக்கைக்கு ஏற்ப அச்சுறுத்தல் இருக்கக்கூடிய சர்வதேச விமான மார்க்கங்களில் புதிதாக ஏர் மார்ஷல்கள் பணியமர்த்தப்படவுள்ளார்கள். விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருடனும் பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகள் நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
தேசிய பாதுகாப்புப் படையில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விமான கடத்தல் தடுப்பில் வல்லுநர்களாக உள்ளவர்கள் ஏர் மார்ஷல்களாக நியமிக்கப்படுவார்கள். பெரும்பாலும் சர்வதேச விமான மார்க்கங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகம் இருக்ககூடிய சில உள்நாட்டு மார்க்கங்களில் உள்ள பயணிகள் விமானத்தில் ஏர் மார்ஷல்கள் பயணிப்பார்கள். சாதாரண உடையுடன் ஆயுதங்களைக் கொண்ட பாதுகாவலர்களாகப் பயணம் மேற்கொள்வார்கள்.
இந்த நடைமுறையானது இந்தியாவில் 1999-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 1999-ல் காந்தஹாரில் ஏர் இந்தியா ஐசி 814 விமானம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆயுதங்களைக் கொண்டு பயணம் மேற்கொள்ளும் ஏர் மார்ஷல்கள், சூழலுக்கேற்ப விமானம் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக செயலில் இறங்குவார்கள்.
அண்மையில் விமானங்களுக்கு நிறைய மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு புதிய மார்ஷல்களை பணியமர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் சமூக ஊடகங்களில் 10-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதன் தொடர்ச்சியாக விமானப் போக்குவரத்துத் துறை உயர்நிலைக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது.
ஆப்கானிஸ்தானிலுள்ள காபுல், நேபாளத்தில் உள்ள காத்மண்டு, இலங்கையிலுள்ள கொழும்பு, கனடாவில் சில மார்க்கங்கள் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் வேறு சில மார்க்கங்கள் அச்சுறுத்தல் இருக்கக்கூடிய மார்க்கங்களாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.