பைக் டாக்ஸி ஓட்டுநர் குறித்து புகார் கூறிய பெண்ணின் பதிவு 
இந்தியா

பைக் டாக்ஸி ஓட்டுநர் கால்களைத் தொட முயன்றார்: காணொளி வெளியிட்டுப் பெண் புகார் | Bike Taxi |

வேறு எந்தப் பெண்ணும் இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ளக் கூடாது...

கிழக்கு நியூஸ்

பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டிய நபர் தன் கால்களைப் பிடிக்க முயன்றதாகக் குற்றம்சாட்டிய பெண் காணொளி வெளியிட்டுள்ளார். அதற்கு பெங்களூரு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்துள்ளது.

பெங்களூருவில் பைக் டாக்ஸியைப் பயன்படுத்திய பெண் ஒருவர், வாகனத்தை ஓட்டியவர் தனது கால்களைப் பிடிக்க முயன்றதாக சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

“நவம்பர் 6 அன்று பெங்களூருவில் நான் சந்திக்கக் கூடாத ஒன்றைச் சந்தித்தேன். சர்ச் தெருவில் இருந்து நான் தங்கியிருக்கும் பெண்கள் விடுதிக்கு பைக் டாக்ஸியில் பயணித்தேன். அப்போது ஓட்டுநர் என் கால்களைப் பிடிக்க முடியன்றார். திடீரென்று இது நடந்ததால் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் என் போனில் அதைப் பதிவு செய்துகொண்டேன். பின் மீண்டும் அவர் என் கால்களைப் பிடிக்க முயன்றபோது “அண்ணா என்ன செய்கிறீர்கள்? இப்படிச் செய்யாதீர்கள்” என்று கூச்சலிட்டேன். ஆனால் அவர் நிறுத்தவில்லை. நான் ஊருக்குப் புதிது என்பதால் என்னால் வாகனத்தை நிறுத்தச் சொல்ல முடியவில்லை.

என் விடுதி வந்ததும் நான் இறங்கினேன். அப்போது கண்களில் நீருடன் இருந்ததைக் கவனித்த நபர் ஒருவர் என்ன பிரச்னை என்று கேட்டார். அவரிடம் நான் இதைத் தெரியப்படுத்தினேன். உடனே அவர் ஓட்டுநரைக் கடிந்து கொண்டார். ஓட்டுநரும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்படும்போது என்னை அச்சுறுத்தும் வகையில் கையால் சைகை காட்டிவிட்டுப் புறப்பட்டார்.

வேறு எந்தப் பெண்ணும் இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக நான் இதைப் பகிர்கிறேன். கார், பைக் டாக்ஸி போன்ற எதிலும் இப்படி ஒரு சூழலைச் சந்திக்கக் கூடாது. இதுபோல் எனக்கு நடப்பது புதிதில்லை ஆனால் இம்முறை என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அதனால் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். அமைதியாக இருக்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், பெங்களூரு காவல்துறை அவருக்குப் பதிலளித்துள்ளது. இச்சம்பவம் குறித்த காணொளி ஆதாரங்களைப் பெற்றுக் கொள்வதாகவும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பைக் டாக்ஸி நிறுவனம், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

In a disturbing incident that took place in Bengaluru, a woman alleged harassment by a Rapido driver after she booked a ride. The incident took place on November 6 while she was returning to her paying guest accommodation from Church Street.