நீதிமன்ற வளாகங்களில் பூஜை செய்வதைத் தவிர்க்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஓகா அறிவுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், அரசியலமைப்பு முகப்புரையின் நகலுக்குத் தலைவணங்கி எந்தவொரு நிகழ்வையும் தொடங்கி வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
புனே மாவட்டம் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அபய் ஓகே பேசினார். அவர் மேலும் கூறியதாவது
"இந்த ஆண்டு நவம்பர் 26 அன்று அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளோம். நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இரண்டு முக்கியமான வார்த்தைகள் உள்ளன என்று நான் எப்போதும் உணர்கிறேன். ஒன்று மதச்சார்பின்மை, இரண்டாவது ஜனநாயகம். நீதி அமைப்பின் மையம் அரசியலமைப்பு என்பதையும் நான் எப்போதும் உணர்கிறேன்.
எனவே சில நேரங்களில் நீதிபதிகள் சில விரும்பத்தகாத விஷயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. இப்போது நீதித்துறை தொடர்பான எந்தவொரு நிகழ்வுகளின் போதும், பூஜை அர்ச்சனை அல்லது விளக்கு ஏற்றுதல் போன்ற சடங்குகளை நாம் நிறுத்த வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன். அதற்குப் பதிலாக அரசியலமைப்பின் முகப்புரையை வைத்து எந்த நிகழ்வையும் தொடங்கி அதற்கு தலைவணங்க வேண்டும். நம் அரசியலமைப்பையும் அதன் மதிப்புகளையும் மதிப்பதற்கு இந்தப் புதிய விஷயத்தை நாம் தொடங்க வேண்டும்.
கர்நாடகத்தில் நான் பணியாற்றிய காலத்தில் இதுபோன்ற மதச் சடங்குகளைத் தடுக்க முயன்றேன். ஆனால், அதை முற்றிலுமாகத் தடுக்க முடியவில்லை. எனினும் அதைக் குறைக்க முடிந்தது” என்றார்.