அம்பானி 
இந்தியா

50 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நெகிழ வைத்த அம்பானி தம்பதி

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் ஜூலை 12 அன்று மும்பையில் நடைபெறவுள்ளது.

யோகேஷ் குமார்

மஹாராஷ்டிரத்தில் 50 ஏழை ஜோடிகளுக்கு அம்பானி தம்பதியினர் இலவச திருமணம் செய்து வைத்தனர்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த ஜனவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து குஜராத் ஜாம்நகரில் மார்ச் 1 அன்று திருமணத்துக்கு முந்தைய விழா தொடங்கியது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் ஜூலை 12 அன்று மும்பையில் நடைபெறவுள்ளது. முன்னதாக, மஹாராஷ்டிரத்தை சேர்ந்த 50 ஏழை ஜோடிகளுக்கு நேற்று அம்பானி தம்பதியினர் தலைமையில் இலவச திருமணம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஜோடிக்கும் தாலி, மண மோதிரம், மூக்குத்தி உள்ளிட்ட தங்க பொருட்கள் மற்றும் வெள்ளியில் மெட்டி, கொலுசு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு ரூ. 1.01 லட்சத்திற்கு காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி திருமண சீர்வரிசையாக ஓராண்டுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.