இந்தியா

வங்கதேச வன்முறை: 978 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாக அறிவிப்பு

கிழக்கு நியூஸ்

வங்கதேசத்தில் வன்முறை நிலவி வரும் நிலையில், இந்திய மாணவர்கள் 978 பேர் நாடு திரும்பியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்டத்துக்காகப் போராடியவர்களின் வழித்தோன்றலுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் முறை 2018 வரை நடைமுறையில் இருந்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை வங்கதேச அரசு 2018-ல் ரத்து செய்தது. இந்த இடஒதுக்கீடு முறைக்கு விதிக்கப்பட்ட தடையை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் அண்மையில் நீக்கியது.

இந்த இடஒதுக்கீடு முறைக்கு எதிராக அந்த நாடு முழுக்க மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வங்கதேசம் 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரப் போராட்டத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியே முன்னிலை வகித்தது. எனவே, இந்த இடஒதுக்கீடு முறையால் அவாமி லீக் கட்சியினரே பெரும்பாலும் பயன்பெறுவார்கள் என்பதால், தகுதியின் அடிப்படையிலான முறை பின்பற்றப்பட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடர்பாக வன்முறை வெடித்துள்ளதால், வங்கதேசம் முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

வன்முறையைத் தொடர்ந்து, இந்திய மாணவர்களைப் பத்திரமாக திரும்ப அழைத்து வருவதற்கானப் பணிகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டது. இன்று வெளியான சமீபத்திய அறிவிப்பின்படி, மொத்தம் 998 மாணர்கள் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார்கள். வங்கதேசத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இன்னும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உள்ளார்கள். இவர்கள் அனைவருடனும் இந்தியத் தூதரகம் தொடர்பில் இருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கோரிக்கைக்கு இணங்க நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளைச் சேரந்த மாணவர்கள் இந்தியா வருவதற்கான உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது.