இந்தியாவுக்கு 2-வது பதக்கம்: மனு பாக்கர் சாதனை! @jio cinema
விளையாட்டு

இந்தியாவுக்கு 2-வது பதக்கம்: மனு பாக்கர் சாதனை!

ஒரே ஒலிம்பிக்ஸில் இரு பதங்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் மனு பாக்கர்.

யோகேஷ் குமார்

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றது இந்திய அணி.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

முதல் நாளில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காத நிலையில், 2-வது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

3-வது நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இதன் மூலம் இந்த ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்தது.

மேலும், ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2-வது பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் மனு பாக்கர்.