நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின். சென்னையில் இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்தவர் பெண் சித்த மருத்துவர். இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் இருந்து வந்துள்ளது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது பிடிக்காத பெண்ணின் இளைய சகோதரர் சுர்ஜித், கவினை கடந்த மாதம் 27 அன்று ஆணவப் படுகொலை செய்தார்.
சுர்ஜித் மற்றும் உதவி ஆய்வாளர்களான அவருடைய பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள்.
சுர்ஜித் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடைய பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என கவினின் உடலை வாங்க மறுத்து கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். பிறகு, தந்தை சரவணன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சுர்ஜித்தின் தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள் கவினின் பெற்றோர். இறுதியாக ஆகஸ்ட் 1 அன்று கவினின் உடலைப் பெற்றுக்கொள்ள அவருடைய பெற்றோர் ஒப்புக்கொண்டார்கள்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவினின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள். திமுக சார்பில் அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் நேரில் சென்றார்கள். திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்றார். விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் நேரில் சென்றார்.
இந்நிலையில், தூத்துக்குடி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் கவினின் பெற்றோர் மற்றும் கவினின் சகோதரரிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Kavin | Honour Killing | Nellai Honour Killing | Tirunelveli | MK Stalin |TN CM MK Stalin