தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு ANI
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

யோகேஷ் குமார்

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் தலைமையிலான அணியில் இரண்டு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல்-ல் அசத்திவரும் கிளாசன், கூட்ஸியா, ஸ்டப்ஸ் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் 9 மாதங்களுக்குப் பிறகு நார்க்கியா சர்வதேச அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த எஸ்ஏ டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரும், சமீபத்தில் முடிவடைந்த சிஎஸ்ஏ டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்தவருமான ரிக்கெல்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் எஸ்ஏ டி20 போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடி 520 ரன்கள் எடுத்தார்.

மேலும், இப்போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்திய பார்ட்மனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க வீரரும், ஆர்சிபி அணியின் கேப்டனுமான டு பிளெஸ்ஸி மீண்டும் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்வு செய்யப்படவில்லை.

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி: மார்க்ரன் (கேப்டன்), பார்ட்மன், கூட்ஸியா, டி காக், ஃபார்டுயின், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், யான்சென், கிளாஸன், கேஷவ் மஹாராஜ், மில்லர், நார்க்கியா, ரபாடா, ரிக்கெல்டன், ஷம்சி, ஸ்டப்ஸ்.

மாற்று வீரர்கள்: பர்கர், இங்கிடி.