சூர்யகுமார் யாதவ்  ANI
விளையாட்டு

சேலத்தில் புச்சி பாபு கிரிக்கெட் போட்டி: சூர்யகுமார் யாதவ் பங்கேற்பு!

யோகேஷ் குமார்

சேலத்தில் நடைபெறவுள்ள புச்சி பாபு கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவுள்ளார்.

நடப்பாண்டு புச்சி பாபு போட்டி ஆகஸ்ட் 15 அன்று தொடங்குகிறது.

ஆகஸ்ட் 27 அன்று சேலத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மும்பை, ஜம்மு - காஷ்மீர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதில் இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவுள்ளார். 17 பேர் கொண்ட மும்பை அணியை சர்ஃபராஸ் கான் வழிநடத்தவுள்ளார்.

இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: “நான் புச்சி பாபு போட்டியில் விளையாடுவேன். உள்ளூர் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு இது நல்ல பயிற்சியாக அமையும்.

ஆகஸ்ட் 25-க்குப் பிறகு அணியில் இணைவேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மும்பை அணிக்காக விளையாடுவேன்” என்றார்.

மேலும், மும்பை அணிக்கு சர்ஃபராஸ் கானே கேப்டனாகத் தொடரட்டும், நான் ஒரு வீரராக மட்டுமே விளையாடுவேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.