ஆசியக் கோப்பைப் போட்டியின் ஆட்ட நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை டி20 போட்டி செப்டம்பர் 9 - 28 தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. 2023 ஆசியக் கோப்பைப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய அணி.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மே மாத ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் என இரு அணிகளும் ஒரு கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்பதால் ஆசியக் கோப்பைக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 14-ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் ஏ-வில் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன். குரூப் சுற்றுக்குப் பிறகு இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதுகின்றன. இதற்குத் தகுதியடைந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் செப்டம்பர் 21-ல் மோத வாய்ப்புள்ளது. இறுதிச் சுற்றுக்கு இரு அணிகளும் தகுதியடைந்தால் செப்டம்பர் 28-ல் மூன்றாவது முறையாகவும் மோத வாய்ப்புள்ளது.
இந்நிலையில் ஆசியக் கோப்பையின் அனைத்து ஆட்டங்களும் (ஓர் ஆட்டம் தவிர) இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் (உள்ளூர் நேரம் மாலை 6 மணி) தொடங்க இருந்தது. ஆனால் வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் இந்திய நேரப்படி இரவு 8 மணி முதல் (உள்ளூர் நேரம் மாலை 6.30 மணி) ஆட்டங்கள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப். 15-ல் நடைபெறவுள்ள யுஏஇ - ஓமன் ஆட்டம் மட்டும் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு அபு தாபியில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.