சந்தீப் லமிச்சானே படம் - twitter.com/Sandeep25
விளையாட்டு

நேபாள வீரர் லமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை

யோகேஷ் குமார்

பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரரான சந்தீப் லமிச்சானேவுக்கு நேபாள நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

நேபாள அணியின் நட்சத்திர வீரரான சந்தீப் லமிச்சானே 51 ஒருநாள் மற்றும் 52 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

கடந்த 2022-ல் காத்மண்டுவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 18 வயதுப் பெண்ணை லமிச்சானே பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அச்சமயத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் சிபிஎல் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த லமிச்சானே உடனடியாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு இடைக்காலத் தடை விதித்தது நேபாள கிரிக்கெட் வாரியம். இச்சம்பவம் குறித்து மறுப்புத் தெரிவித்திருந்தார் லமிச்சானே. பிறகு நேபாள அணிக்காக சில போட்டிகளில் விளையாடவும் செய்தார்.

இந்நிலையில் லமிச்சானே மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு டிச.29 அன்று விசாரணைக்கு வந்தது. லமிச்சானேவைக் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் தற்போது தண்டனையை அறிவித்துள்ளது. அதன்படி, லமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக லமிச்சானேவின் வழக்கறிஞர் சரோஜ் தெரிவித்துள்ளார்.