நிதிஷ் ரெட்டி  ANI
விளையாட்டு

தோனி குறித்த கருத்துக்கு எதிர்ப்பு: சன்ரைசர்ஸ் வீரர் நிதிஷ் ரெட்டி விளக்கம்

யோகேஷ் குமார்

தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என சன்ரைசர்ஸ் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐபிஎல் 2024 போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக 13 ஆட்டங்களில் விளையாடி இரண்டு அரைசதங்கள் உட்பட 303 ரன்கள் குவித்தார் நிதிஷ் குமார் ரெட்டி. இந்த ஆண்டுக்கான எமர்ஜிங் பிளேயர் விருதையும் வென்றார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “தோனியின் மனநிலை எனக்கு மிகவும் பிடிக்கும்” என பேசியுள்ளார். ஆனால், நிதிஷ் ரெட்டி “விராட் கோலியுடன் ஒப்பிடும் போது தோனியின் யுக்திகள் குறைவாக இருக்கிறது” என்று பேசியது போல ஒரு காணொளியை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் நிதிஷ் ரெட்டி.

அவர் பேசியதாவது: “நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். என்னிடம், ‘திறமை முக்கியமா? அல்லது மனநிலை முக்கியமா?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் மனநிலைதான் முக்கியம் என்றேன். அப்போது தோனியை அதற்கு உதாரணமாகக் கூறினேன். ஒரு வெற்றியை தீர்மானிப்பதில் ஒருவரின் மனநிலை மிகவும் வலிமையாக இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். நான் பேசியதை முழுமையாக வெளியிடாமல், ஒரு சிலர் அதனை தொகுத்து வேறு ஒரு காணொளியாக வெளியிட்டனர். முழுமையான கதையை அறியாமல் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்” என்றார்.