பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! @mkstalin
விளையாட்டு

பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

யோகேஷ் குமார்

நார்வே செஸ் தொடரின் 5-வது சுற்றில் வெற்றி பெற்று உலக செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் டிங் லிரன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் பங்கேற்றுள்ளனர்.

இத்தொடரின் 5-வது சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் நெ.2 செஸ் வீரரான ஃபாபியானோ கருவாணாவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக உலக செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார் பிரக்ஞானந்தா. இந்நிலையில் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக மூன்றாவது சுற்றில், பிரக்ஞானந்தா உலகின் நெ.1 செஸ் வீரரான கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “நார்வே செஸ் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரக்ஞானந்தா. ‘கிளாசிகல்’ முறையில் உலகின் நெ.1 மற்றும் நெ.2 வீரர்களை வீழ்த்துவது வியக்கத்தக்க வைக்கும் சாதனை. உலக செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியதற்கு வாழ்த்துகள். செஸ் உலகமே உங்களின் திறமையைக் கண்டு வியக்கிறது” என்றார்.