நான் கிரிக்கெட் விளையாடும் மனநிலையிலேயே இல்லை என்பதால் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்டேன் என்று இஷான் கிஷன் பேசியுள்ளார்.
2023 - 2024 பருவத்துக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
இஷான் கிஷன் கடைசியாக கடந்த நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடினார். இதைத் தொடர்ந்து உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி வந்த அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார்.
இந்நிலையில் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து இஷான் கிஷன் பேசியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிர்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது
“நான் அதிகமான ரன்களை குவித்து வந்தேன். இருப்பினும் நான் அணியில் இடம்பெறாமல் இருந்தேன். ஆனால், விளையாட்டில் இது சகஜம் தான். நான் பயண சோர்வால் பாதிக்கப்பட்டேன். எனது உடல்நலம் சரியில்லாத காரணத்தால் ஓய்வு எடுக்க முடிவு செய்தேன். இதனை என் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களை தவிர யாரும் புரிந்து கொள்ளவில்லை.
பொதுவாக ஒரு விளையாட்டு வீரருக்கு தன்னை பற்றி தனது குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள்? என்பது மிகப்பெரிய யோசனையாக இருக்கும். குடும்பத்தினர் பாதிக்கப்பட்டால் அது நம்மையும் பாதிக்கும். ஆனால், அந்த சூழலில் என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர்.
கிரிக்கெட்டை பொறுத்தவரை ஓர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
நான் கிரிக்கெட் விளையாடும் மனநிலையிலேயே இல்லை என்பதால் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில் அர்த்தமே இல்லை. அப்படியென்றால் நான் இந்திய அணியிலேயே தொடர்ந்து விளையாடி இருப்பேன்” என்றார்.