ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி பந்தைச் சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் குற்றம் சாட்டியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தின் 16-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் எப்படி ரிவர்ஸ் ஸ்விங் செய்திருக்க முடியும் என இன்ஸமாம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், “ஆட்டத்தின் 16-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார். புது பந்தில் எப்படி அவ்வளவு எளிதில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும்? 12-வது அல்லது 13-வது ஓவரிலேயே பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு தயாராக இருந்ததா? நடுவர்கள் தங்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும்” என்றார்.