இந்திய அணி ANI
விளையாட்டு

தாயகம் திரும்பும் இந்திய அணி: பாராட்டு விழா நடத்தவுள்ள பிசிசிஐ!

தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டு நாளை அதிகாலை தில்லி வரவுள்ளனர்.

யோகேஷ் குமார்

புயலின் அபாயம் காரணமாக நாடு திரும்புவதில் தாமதமான நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இறுதிச் சுற்று முடிந்தவுடன் கடந்த ஞாயிறு அன்று இந்திய அணி மீண்டும் நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது. ஆனால், பார்படாஸில் பெரில் புயலின் அபாயம் இருப்பதால் விமான நிலையம் மூடப்பட்டு, விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பார்படாஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். புயலில் தாக்கம் குறைந்தவுடன் இந்திய அணி மீண்டும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பார்படாஸில் நேற்று விமான நிலையம் வழக்கம் போல் இயங்கத் துவங்கின.

எனவே, இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டு நாளை அதிகாலை தில்லி வரவுள்ளனர். வீரர்களுடன் சேர்ந்து இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, இந்திய அணி நாடு திரும்பியவுடன் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை இந்திய வீரர்கள் உலகக் கோப்பையுடன் மும்பையில் சாலை பேரணி மேற்கொள்ள உள்ளதாகவும், வான்கெடே மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.