ANI
விளையாட்டு

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா, கோலி ஓய்வு!

கிழக்கு நியூஸ்

கோலிக்கு அடுத்ததாக, டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் அறிவித்துள்ளார்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி இறுதிச் சுற்று ஆட்ட நாயகனாகவும் பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.

பரிசளிப்பு விழாவில் பேசிய விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுவே என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்தாலும் இதனை அறிவித்திருப்பேன். அடுத்த தலைமுறைக்கு வழிவிடவே இம்முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஒரே நாளில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.

37 வயது ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 2007 முதல் 159 ஆட்டங்களில் விளையாடி 5 சதங்கள், 32 அரை சதங்களுடன் 4231 ரன்கள் எடுத்துள்ளார்.