விளையாட்டு

2-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்கப் போராடும் இந்திய அணி!

கடைசியாக 2012-ல் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.

யோகேஷ் குமார்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேவில் அக்டோபர் 24 அன்று தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வினின் அசத்தலான பந்துவீச்சில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 33 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்களும் கில் மற்றும் ஜெயிஸ்வால் ஆகியோர் தலா 30 ரன்களும் எடுத்தனர். மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் லேதம் 86 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 48 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார் ஜெயிஸ்வால். ரோஹித் சர்மா 8, கில் 23 ரன்களில் வெளியேற மறுமுனையில் ஜெயிஸ்வால் அரை சதம் அடித்தார். 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து ஜெயிஸ்வால் ஆட்டமிழக்க, அதன் பிறகு கோலி 17 ரன்களிலும், ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமலும், சர்ஃபராஸ் கான் 9 ரன்களிலும் மிட்செல் சான்ட்னர் பந்தில் வெளியேறினர்.

இதன் மூலம் 3-வது நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அஸ்வின் 9 ரன்களும், ஜடேஜா 4 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 181 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்திய அணி கடைசியாக 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.