பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணி! @bcci
விளையாட்டு

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணி!

இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது.

யோகேஷ் குமார்

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, நாடு திரும்பிய நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளது.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையையும், 13 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையையும் வென்ற இந்திய அணி மே.இ. தீவுகளில் இருந்து நேற்று புறப்பட்டது.

தனி விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி இன்று அதிகாலை தில்லி வந்தடைந்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் நடனம் ஆடியும், கேக் வெட்டியும் வெற்றியைக் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்களுடன் ராகுல் டிராவிட், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் உடனிருந்தனர். அங்கு இந்திய அணிக்கு விருந்து வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகு வீரர்கள் அனைவரும் மோடியுடன் கலந்துரையாடி உள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு தில்லி விமான நிலையத்துக்கு சென்றனர்.

தில்லியிலிருந்து மும்பை செல்லும் இந்திய அணிக்கு இன்று மாலை 5 மணி முதல் மரைன் டிரைவ் மற்றும் வான்கடேவில் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.