ஹாரி புரூக்
ஹாரி புரூக்  ANI
விளையாட்டு

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்: காரணத்தைக் கூறிய ஹாரி புரூக்

யோகேஷ் குமார்

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதற்கானக் காரணத்தைக் கூறியுள்ளார் ஹாரி புரூக்.

ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக்கை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்திருந்தது தில்லி கேபிடல்ஸ் அணி. இந்நிலையில் சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து ஹாரி புரூக் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதற்கானக் காரணத்தை கூறியுள்ளார் ஹாரி புரூக்.

ஹாரி புரூக் பேசியதாவது:

“ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியது மிகவும் கடினமான முடிவு. தில்லி அணியில் விளையாட மிகவும் ஆவலாக இருந்தேன். இதற்கான காரணத்தைக் கூற வேண்டாம் என நினைத்தேன். ஆனால், பலரும் இது குறித்து கேட்பார்கள் என தெரியும். எனவே இதனை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

கடந்த மாதம் என்னுடைய பாட்டி இறந்துவிட்டார். என்னுடைய குழந்தை பருவத்தில் அதிகமான நாட்களை அவர் வீட்டில் தான் செலவிட்டேன். வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வளர்த்ததில் அவருக்கும் என் தாத்தாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. வீட்டில் இருக்கும்போது அவரை பார்க்காமல் நான் இருந்ததில்லை.

இங்கிலாந்து அணிக்காக நான் விளையாடியதை அவரால் பார்க்கமுடிந்தது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தது, அப்போது அங்கிருந்து புறப்பட முடிவு செய்தேன்.

துக்கதில் இருக்கும் என் குடும்பத்துக்குத் துணை நிற்க விரும்புகிறேன். குடும்பத்தை விடவும் வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை. இது சரியான முடிவு என நினைக்கிறேன்” என்றார்.