தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
14-வது சுற்றில் 58-வது நகர்த்தல்களில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தினார்.
நடப்பு உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை முடிவு செய்வதற்கான 2024 ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி ஏப்ரலில் கனடாவில் நடைபெற்றது. கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியை 17 வயதில் வென்று சாதனை படைத்த குகேஷ், அப்போட்டியை வென்றதன் மூலம் ஆடவர் உலக செஸ் சாம்பியனுக்கான போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரனுடன் மோதுவதற்கான தகுதியை அடைந்தார். இறுதிச் சுற்றில் உலக சாம்பியனுடன் மோதிய போட்டியாளர்களிலும் இள வயது வீரர் குகேஷ் தான். 2014-ல் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியரும் குகேஷ் தான்.
2014-ல் ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியில் கார்ல்சனிடம் வீழ்ந்தார் ஆனந்த். இதையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓர் இந்தியர் பங்கேற்றார்.
இப்போட்டிக்கு முன்பு கிளாசிகல் முறைல் குகேஷும் டிங் லிரனும் மூன்று முறை மோதியதில் இரு ஆட்டங்களில் டிங் லிரன் வெற்றி பெற்றார். ஓர் ஆட்டம் டிரா ஆனது.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 13 சுற்றுகளின் முடிவில் இருவரும் 6.5-6.5 என சமநிலையில் இருந்தார்கள். இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி சுற்றில் ஆட்டம் டிரா ஆகும் என அனைவரும் எண்ணியிருந்த நிலையில் கடைசி வரை போராடினார் குகேஷ். கடைசியில் டிங் லிரன் செய்த தவறால் 56-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ். உலக சாம்பியன் ஆன இளவயது வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்கிற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.