டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் விராட் கோலிக்கு ஆஸி. மண்ணில் இன்றும் மோசமான அனுபவம் கிடைத்தது.
இந்திய அணி தோற்ற பெர்த் ஒருநாள் ஆட்டத்தில் கோலி டக் அவுட் ஆனார். அடிலெய்டில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் ஆட்டத்திலும் ரன் எதுவும் எடுக்காமல் சேவியர் பார்ட்லெட் பந்தில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் கோலி.
மேலும் ஆட்டமிழந்து ஓய்வறைக்குத் திரும்பியபோது ரசிகர்களிடம் சைகையில் விடைபெறுவது போல செய்தார். இந்தச் செயல் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு அடிலெய்டில் விளையாடிய 4 ஒருநாள் ஆட்டங்களில் 2 சதங்கள் எடுத்தார் கோலி. 2015 உலகக் கோப்பையில் அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிராகச் சதமடித்தார். இதன்மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகச் சதமடித்த முதல் இந்திய பேட்டர் என்கிற பெருமையை அடிலெய்ட் மண்ணில் பெற்றார்.
இந்நிலையில் விடைபெறுகிறேன் என்பது போன்ற கோலியின் இன்றைய சைகை என்ன உணர்த்துகிறது என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதால் அதுபோன்ற ஒரு சைகையை வெளிப்படுத்தினாரா இல்லை இதுவே அடிலெய்ட் மண்ணில் விளையாடும் கடைசி ஆட்டம் என்பதாலா என ரசிகர்கள் பல்வேறு கருத்துகளுடன் இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் விவாதித்து வருகிறார்கள்.
Virat Kohli waves goodbye to Adelaide crowd after getting consecutive ducks for first time, sparks retirement talks.