தேவேந்திர ஃபட்னவீஸ் ANI
விளையாட்டு

மும்பையில் வான்கடேவை விட பெரிய மைதானம்: மஹா. துணை முதல்வர் கோரிக்கை

யோகேஷ் குமார்

வான்கடே மைதானத்தை விட பெரிய மைதானம் ஒன்று மும்பையில் அமைக்கப்பட வேண்டும் என மஹாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 11 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெயிஸ்வால் ஆகியோரை அழைத்து கௌரவித்தார். மஹாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியதாவது:

“மும்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானமாக வான்கடே மைதானம் உள்ளது. ஆனால், வான்கடே மைதானத்தை விட பெரிய மைதானம் ஒன்று மும்பையில் அமைக்கப்பட வேண்டும். இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கும், பிசிசிஐ-க்கும் நம் முதல்வர் தேவையான உதவிகளை செய்வார். வான்கடே மைதானம் மிகச்சிறந்த மைதானம், அதனை மற்ற மைதானங்களுடன் ஒப்பிட முடியாது. ஆனால், தற்போது மும்பையில் ஒரு லட்சத்துகும் அதிகமான நபர்கள் அமரும் வசதியுடன் ஒரு மைதானத்தை அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது” என்றார்.