ஐபிஎல் போட்டியில் வங்கதேச வீரர்கள் பங்கேற்க எதிர்ப்பு: பிசிசிஐ விளக்கம்  
விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் வங்கதேச வீரர்கள் பங்கேற்க எதிர்ப்பு: பிசிசிஐ விளக்கம் | IPL | BCCI |

எதிர்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து கேகேஆர் அணி இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை....

கிழக்கு நியூஸ்

2026 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர்களை இணைத்துக் கொள்வது குறித்து எழுந்த சர்ச்சைக்கு பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.

2026 ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் முதல் மே வரை நடைபெறவுள்ளது. அதற்காக வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஏலம் நிறைவடைந்து அணிகள் தயாராகி வருகின்றன. இதற்கிடையில், வங்கதேச வீரர் முஸ்தஃபிஸுர் ரஹ்மானை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா அணிக்கு இந்து அமைப்பினர்களால் புதிய பிரச்னை எழுந்துள்ளது.

யார் இந்த முஸ்தஃபிஸுர் ரஹ்மான்?

வங்கதேசத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் முஸ்தஃபிஸுர் ரஹ்மான். இவர், அந்நாட்டு அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் 60 போட்டிகளில் 65 விக்கெட்டுகளை எடுத்தவர். 2016-ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடி அறிமுகமான இவர், 2018-ல் மும்பை இந்தியன்ஸ், 2021-ல் ராஜஸ்தான் ராயல்ஸ், 2022, 2023-ல் தில்லி கேபிடல்ஸ், 2024-ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவரை, இம்முறை ரூ. 9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான போக்கு

இதற்கிடையில் டிசம்பர் 18 அன்று வங்கதேசத்தில் நடந்த மாணவ அமைப்பினரின் வன்முறையில் சிறுபான்மை இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து இளைஞர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் நிலவியது. இதற்கிடையில், வங்கதேச வீரரை இந்திய அணியில் இணைத்துக் கொண்டு ஐபிஎல் விளையாடுவதற்கும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அச்சுறுத்தல்

வங்கதேச வீரரை அணியில் சேர்க்கக் கூடாது என்று கிளம்பிய எதிர்ப்பு, மீறி இணைத்தால் போட்டியைப் புறக்கணிப்போம் என்றும் மைதானத்தைச் சூறையாடுவோம் என்றும் இந்து அமைப்பினர் பலரால் சமூக ஊடகங்களில் அச்சுறுத்தலையும் பெற்றது. கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கானைக் கடுமையாகச் சாடினர். மேலும் கேகேஆருக்கு எதிராக ஹேஷ்டேகுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இந்த எதிர்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து கேகேஆர் அணி இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை.

பிசிசிஐ விளக்கம்

இந்நிலையில், வங்கதேச வீரர்களைப் போட்டியில் சேர்த்துக்கொள்வது குறித்து பிசிசிஐ ஐஏஎன்எஸ் செய்தித் தளத்திற்கு விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டதாவது: “இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. வங்கதேச வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அதனால் இது தொடர்பாக நாங்கள் கருத்து சொல்ல முடியாது” என்று கூறியிருக்கிறது.

The BCCI has clarified the controversy surrounding the inclusion of Bangladeshi players in the 2026 IPL cricket tournament.