பாபர் ஆஸம் ANI
விளையாட்டு

11 பேருக்காகவும் நான் விளையாட முடியாது: பாபர் ஆஸம்

"கேப்டன் என்பதால் அணியின் தோல்விக்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியாது".

யோகேஷ் குமார்

பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு ஒருவரை மட்டும் காரணமாக சொல்லக்கூடாது என பாபர் ஆஸம் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய பெரிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின. அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.

இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம், “கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது, கிரிக்கெட் வாரியத்தின் முடிவாகும்” என கூறியுள்ளார்.

பாபர் ஆஸம் பேசியதாவது:

“2023-ல் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகும்போது, உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட வேண்டாம் என நினைத்தேன். ஆனால், மீண்டும் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது, கிரிக்கெட் வாரியத்தின் முடிவாகும். கேப்டன் பதவியிலிருந்து விலக நினைத்தால், அதனை நானே அறிவிப்பேன். தற்போது அந்த எண்ணம் எனக்கு இல்லை. அதனை கிரிக்கெட் வாரியம் தான் முடிவுசெய்ய வேண்டும். கேப்டன் என்பதால் அணியின் தோல்விக்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. 11 பேருக்காகவும் நான் விளையாட முடியாது. வெற்றி, தோல்வி என எதுவாக இருந்தாலும் அது ஒட்டுமொத்த அணியையும் சேரும். இது உலகக் கோப்பை, அணியில் உள்ள 11 பேரும் சிறப்பாக விளையாட வேண்டும். நாங்கள் எங்கள் தோல்வியை ஒப்புக் கொள்கிறோம். நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பது குறித்து விவாதிப்போம். ஒரு கேப்டனாக அணியின் தோல்விக்கு ஒருவரை மட்டுமே காரணமாக சொல்லமாட்டேன்” என்றார்.