ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர் ANI
தற்போதைய செய்திகள்

ஐபிஎல் 2024: காயம் காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் விலகல்?

யோகேஷ் குமார்

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் முதுகு வலியால் பாதிக்கப்பட்டார் ஸ்ரேயஸ் ஐயர். இதனால் ஐபிஎல் 2024 போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

ஸ்ரேயஸ் ஐயர் முதுகுத் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டுவந்த நிலையில் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் கடைசி மூன்று டெஸ்டுகளிலிருந்து விலகினார்.

இதன் பிறகு ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மும்பை அணிக்காக விளையாடினார். இந்நிலையில் இறுதிச்சுற்றில் விளையாடிய அவர் 2-வது இன்னிங்ஸில் 95 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் முதுகு வலியால் பாதிக்கப்பட்டார் ஐயர். 4-வது நாள் முழுவதும் ஃபீல்டிங் செய்யாத அவர், முதுகில் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து 5-வது நாள் ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

பரிசோதனை செய்து பார்த்ததைத் தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயர் முதுகுத் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் ஐபிஎல் தொடக்கத்தில் ஒரு சில ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகம் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே முதுகு வலி காரணமாக கடந்த ஐபிஎல் போட்டியிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகினார். அவருக்குப் பதிலாக கேகேஆர் அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா செயல்பட்டார்.

ஐபிஎல் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், கேகேஆர் அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.