தற்போதைய செய்திகள்

புதிய உச்சத்தில் தங்கம் விலை| Gold Rates |

வெள்ளியின் விலையும் கடும் உயர்வு கண்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி...

கிழக்கு நியூஸ்

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 1,280 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 92,000-க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச பொருளாதாரத்தில் மாற்றம், தங்கத்தின் மீதான திடீர் முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

குறிப்பாக அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அக்டோபர் 1 அன்று ரூ. 87,600-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ. 5,000 அதிகரித்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ. 31,000-க்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த அக்டோபர் 9 அன்று தங்கம் விலை அதிரடியாக இருமுறை உயர்ந்து ரூ. 91,000-ஐ கடந்தது. விரைவில் ரூ. 1 லட்சத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மட்டும் தங்கம் விலை இருமுறை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலையில் தங்கம் விலை, கிராமுக்கு ரூ. 85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 11,425-க்கும், சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 91,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தற்போது, கிராமுக்கு ரூ. 75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 11,500-க்கும் சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 92,000-க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,280 அதிகரித்துள்ளது.

வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. இன்று காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ. 3,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 187-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பின்னர் மாலையில் மீண்டும் விலை உயர்ந்தது. அதன்படி தற்போது, ஒரு கிராம் வெள்ளி ரூ. 190-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.