எஸ்.ஏ. சந்திரசேகர்
எஸ்.ஏ. சந்திரசேகர் 
தற்போதைய செய்திகள்

எஸ்.ஏ.சி. பேச்சு: 'லியோ' படத்தை விமர்சித்தாரா?

யோகேஷ் குமார்

இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர், “அந்த இயக்குநருக்கு விமர்சனங்களைத் தாங்கும் பக்குவமும், தைரியமும் இல்லை” என மேடையில் பேசினார்.

இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தேசிங்குராஜா-2 படத்தின் விழாவில் கலந்துகொண்டார். இவ்விழாவில் அவர் ஒரு இயக்குநரிடம் பேசிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது: “சமீபத்தில் நான் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் காபியை (First Copy) பார்த்து விட்டு அந்த படத்தின் இயக்குநருக்கு அழைத்து, படத்தின் முதல் பாதி மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். அவரும் சரி, சரி என அதனைக் கேட்டுக்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து இரண்டாம் பாதி கொஞ்சம் சரியில்லை சார் என்றேன், அது வரை கேட்டுக்கொண்டிருந்த அவர் “சார் நான் சாப்பிட்டு இருக்கேன் சார்” என்றார். மேலும் எனக்கு மத நம்பிக்கை இல்லை, இருந்தும் ஒரு தகப்பனே மகனை கொலை செய்யும் காட்சிகள் சரியில்லை என்றேன். அதற்கு மீண்டும் அவர் “சார் நான் சாப்பிட்டு இருக்கேன், கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடுறேன்” என கூறி அலைப்பேசியை வைத்தார். ஆனால், இன்று வரை அவர் மீண்டும் அழைக்கவில்லை. படம் வெளிவந்த பிறகு நான் கூறியதை தான் அனைவரும் குறையாகச் சொன்னார்கள். அந்த இயக்குநருக்கு விமர்சனங்களைத் தாங்கும் பக்குவமும், தைரியமும் இல்லை” என்றார்.

அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எஸ்.ஏ சந்திரசேகர் ‘லியோ ’ படத்தை குறிப்பிட்டு அவ்வாறு பேசினாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.