ரா. சங்கரன் @offBharathiraja
சினிமா

மறைந்தார் 'மிஸ்டர் சந்திரமெளலி' புகழ் சங்கரன்

Madhavan

இயக்குநரும் பழம்பெரும் நடிகருமான ரா. சங்கரன் இன்று காலமானார். அவருக்கு வயது 92.

தமிழில் ’ஆடிப்பெருக்கு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சங்கரன், 1974-ல் வெளியான 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். ‘தேன் சிந்துதே வானம்’, ‘தூண்டில் மீன்’, ‘வேலும் மயிலும் துணை’ போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

நடிப்பிலும் தனக்கென பாதையை வகுத்துக்கொண்ட சங்கரன், 'பகல் நிலவு', 'மெளன ராகம்', 'ஒரு கைதியின் டைரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். மெளன ராகம் படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்துக் கவனம் பெற்றார். இவரை, மிஸ்டர் சந்திரமெளலி என கார்த்திக் மீண்டும் மீண்டும் அழைக்கும் காட்சியை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது.

இந்நிலையில், ரா. சங்கரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இயக்குநர் பாரதிராஜா, இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: எனது ஆசிரியர் இயக்குநர் திரு. ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.