படம்: https://x.com/VinodhiniUnoffl/
சினிமா

இவ்வளவு வரி கட்டியும்...: கொந்தளித்த நடிகை

கிழக்கு நியூஸ்

சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை விமர்சித்து நடிகை வினோதினி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய மிகக் கனமழை பெய்தது. அம்பத்தூர், அயப்பாக்கம், அண்ணா நகர் மேற்கு ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 100 மி.மீ. அளவில் மழை பெய்ததாக தமிழ்நாடு வெதர்மேன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டார். கனமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதை விமர்சித்து நடிகை வினோதினி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் நிறைய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதற்கு ஏதாவது செய்யப்பட்டுள்ளதா அல்லது இப்படிதான் வாழ வேண்டுமா?

இவ்வளவு வரிப் பணம் செலுத்தியும், மிக மோசமான சூழல் இது. இப்போ சார்ந்தோர் எல்லாரும் கடிச்சு வெக்க வராதீங்க. உங்களுடையச் சொந்த குடும்பங்கள் பாதிக்கப்படுவதைப் பாருங்கள். அப்போதுதான் இந்தச் சூழல் குறித்து உங்களுக்குப் புரியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தையும் இணைத்துள்ளார்.

கடந்தாண்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.