சினிமா

எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டன், அனிருத்...: யார் யாருக்கு கலைமாமணி விருது? | Kalaimamani Awards |

பாடகர் யேசுதாஸுக்கு இசைத்துறையில் உயரிய எம்.எஸ். சுப்புலட்சுமி விருது அறிவித்து கௌரவம்...

கிழக்கு நியூஸ்

தமிழகத்தில் கலைஞர்களுக்கு அரசு வழங்கும் கௌரவமான கலைமாமணி விருதைக் கடந்த 2021, 2022, 2023 ஆண்டுகளுக்காகப் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் சிறந்த பணியாற்றி வரும் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாகக் கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி விருதுகளும் வழங்கப்படுகின்றன. இதையடுத்து, பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி விருதுகளும், கடந்த 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பாரதியார் விருது முனைவர் ந. முருகேச பாண்டியன், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பாடகர் பத்மபூஷன் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பாலசரசுவதி விருது நாட்டியக் கலைஞர் பத்மஸ்ரீ முத்துக் கண்ணம்மாள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021 ஆண்டுக்கான திரைத்துறையின் கலைமாமணி விருதுகள் நடிகர்கள் எஸ்.கே. சூர்யா, சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, அரங்க வடிவமைப்பாளர் ஜே.கே, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாண்டுக்கான இயல் துறையின் கலைமாமணி விருதுகள் எழுத்தாளர் திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சொற்பொழிவாளர் தங்கம்பட்டர் ஆகியோருக்கும்,

இசைத் துறைக்கான கலைமாமணி விருது, பாடகர்கள் பாபநாசம் அசோக் ரமணி, டி.ஏ.எஸ். தக்கேசி, ஓதுவார் சற்குருநாதன், மிருதங்கக் கலைஞர் நரேந்திரன், கோட்டு வாத்திய கலைஞர் என்.நரசிம்மன், நாதசுர ஆசிரியர் கோ. பில்லப்பன், நாதசுரக் கலைஞர்கள் டி.ஜே. சுப்பிரமணியன், கல்யாணபுரம் ஜி.சீனிவாசன், தவில் கலைஞர் கே.சேகர் ஆகியோருக்கும்

நாட்டியத் துறைக்கான கலைமாமணி விருது, பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பழனியப்பன், பரதநாட்டிய கலைஞர் பிரியா கார்த்திகேயன் ஆகியோருக்கும்,

நாடகத் துறைக்கான கலைமாமணி விருது நாடக நடிகர் பூச்சி எஸ். முருகன், நாடக இயக்குநர் காரைக்குடி நாராயணன், ஆர்மோனிய கலைஞர் என்.ஏ. அலெக்ஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத் திரைக்காக பி.கே.கமலேஷுக்கும், இசை நாடகத்திற்கான விருது நடிகர் எம்.பி. விசுவநாதனுக்கும் இதர கலைப்பிரிவில் ஓவியர் வே. ஜீவானந்தத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமியக் கலைகளுக்கான கலைமாமணி விருது கிராமியப் பாடகர் வீர சங்கர், பொய்க்கால் குதிரை ஆட்டக் கலைஞர் நா. காமாட்சி, பெரிய மேளக் கலைனர் எம். முனுசாமி, நையாண்டி மேளம் மற்றும் நாதசுரக் கலைஞர் பி. மருங்கன், வள்ளி ஒயில்கும்மிக் கலைஞர் கே.கே.சி. பாலு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2022 ஆண்டுக்கான திரைத்துறையின் கலைமாமணி விருதுகள் நடிகர்கள் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா, செய்தித் தொடர்பாளர் டைமண்ட் பாபு, புகைப்படக் கலைஞர் லட்சும்மிகாந்தன், சின்னத்திரை நடிகை மெட்டி ஒலி காயத்ரி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இயல் துறையில் எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகாடாட்சம், பேச்சாளர் அப்துல்காதர், சொற்பொழிவாளர் முத்துகணேசன் ஆகியோருக்கும்,

இசைத்துறையில் பாடகர்கள் ஜெயஸ்ரீ வைத்தியநாதன், சாரதா ராகவ், வயலின் இசைக் கலைஞர் பகலா ராமதாஸ், மிருதங்கக் கலைஞர் நெய்வேலி ஆர். நாராயணன், நாதசுரக் கலைஞர்கள் மோகன்தாஸ், டி.ஜி. முருகவேல், தவில் கலைஞர் பாபு, கதா காலட்சேபக் கலைஞர் சுசித்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கும்,

நாட்டியத் துறையில் பரதநாட்டிய ஆசிரியர் அமுதா தண்டபாணி, கலைஞர் சுப்பிரமணிய பாகவதர், பரதநாட்டியக் குரலிசைக் கலைஞர் சுரேஷ் ஆகியோருக்கும்

நாடகத் துறையில் நடிகர் பொன் சுந்தரேசன், நாடக இயக்குநர் கவிஞர் நன்மாறன், தயாரிப்பாளர் சோலை ராஜேந்திரன் ஆகியோருக்கும்

கிராமியக் கலைப்பிரிவில் தேவராட்டக் கலைஞர் ரஞ்சிதவேல் பொம்மு, பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன், தப்பாட்டக் கலைஞர் ராதாரவி, நையாண்டிமேள நாதசுரக் கலைஞர் கே. பாலு ஆகியோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இசை நாடகக் கலைஞர் என். சத்தியராஜுக்கும் இதர கலைப் பிரிவில் ஓவியர் லோகநாதனுக்கும் பண்பாட்டுக் கலை பரப்புநர் ஆர். சாமிநாதனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் திரைத்துறையில் நடிகர்கள் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகர் ஸ்வேதா மோகன், நடன இயக்குநர் சாண்டி, செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன், சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் உமாசங்கர் பாபு, சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இயல் தமிழுக்காக கவிஞர் ஜீவபாரதிக்குக் கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது.

இசைத்துறையில் பாடகர் காசியப் மகேஷ், வீணைக் கலைஞர் ஹேமலதாமணி, கிளாரினெட் கலைஞர் வெ. பிரபு, நாதசுரக் கலைஞர்கள் பி.பி. ரவிச்சந்திரன், ஞான நடராஜன், எம்.எஸ்.ஆர். பரமேஸ்வரன், தவில் கலைஞர்கள் ராமஜெயம் பாரதி, பா. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும்,

நாட்டியத்திற்காக பரதநாட்டிய ஆசிரியர் தனசுந்தரி, குச்சிப்பிடி கலைஞர் வி. ஜெயப்பிரியா, பரதநாட்டியக் குரலிசைக் கலைஞர் கே. ஹரிபிரசாத் ஆகியோருக்கும் ,

நாடகத்துறையில் பழம்பெரும் நாடக நடிகர் என். ஜோதிகண்ணன், நாடக நடிகர்கள் வானதிகதிர், வி.கே. தேவநாதன் ஆகியோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இசை நாடகத் துறையில் நடிகர்கள் ஏ.ஆர்.ஏ. கண்ணன் மற்றும் ஆர்.எம். தமிழ்ச்செல்வி ஆகியோருக்கும்,

கிராமியக் கலைகளுக்காக தெருக்கூத்துக் கலைஞர் கே.எம். ராமநாதன், வில்லுப்பாட்டுக் கலைஞர் டி.ஜெகநாதன், நையாண்டி மேள தவில் கலைஞர் சி. மகாமணி , கிராமியப் பாடல் ஆய்வாளர் ஆ. சந்திரபுஷ்பம் ஆகியோருக்கும் இதர கலைப் பிரிவில் சிற்பி சு. தீனதயாளனுக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.